Sunday, November 7, 2010

என் அவளுக்கு மட்டும் (தொடர்ச்சி)

புதிதாக  விடியும் என்றுதான்
நினைத்தேன் பொழுது 
ஆனால் வழக்கம் போலவே 
விடிந்திருக்கிறது 
அவளுடைய நினைவுகளோடு 
________________________________

தோழியின்  உரிமைகள் 
கனவுகள்,ஏக்கங்கள் 
அதட்டல்கள் வரிசையில் 
அவளைப் பார்க்கப் போகிற நாளும் 
தனிசுகமாய் இனிக்கிறது 
____________________________________

நீ எப்போது பூப்பூத்தாயோ 
அப்போது நான் கவிஞனாகியிருக்கிறேன்
தொலைவில் இருந்தும் 
நாம் தொட்டுக் கொண்டிருந்திருக்கிறோம் 
______________________________________________

உன் திருமணத்திற்கு 
என்னை அழைக்காதே 
ஒருவேளை இதயம் இருப்பதை 
நான் உணரக்கூடும் 
_________________________________________

அளவு கடந்த 
நேசிப்பிற்குள்ளாகி விட்டது 
நம் காதலை 
மீண்டும் புதுப்பித்த 
உன் வீட்டு மொட்டைமாடி 
______________________________________

ஏற்றவளில்லை
மிதமிஞ்சிய அறிவோடும் 
அளவுமீறிய அழகோடும் 
என்னை நேசிக்கிறாள் 
__________________________________

எனக்கு வேண்டும் 
என்தோளில் நீ சாய்ந்துகொண்டு 
பேருந்துப் பயணங்கள் 
காற்றை உண்டு களிக்கும்
அந்திப் பொழுதுகள் 
மெலிதான மௌனம் 
எனக்கான அன்பு 
உயிர்த்தோழி 
நீ....
___________________________________

இப்போதெல்லாம் 
பூக்களைவிட 
மேகத்தைவிட 
உன்னைத்தான் அதிகமாய் நேசிக்கிறேன் 
நீ சண்டையிடத்தான் வேண்டியிருக்கிறது 
பூக்களோடும்,மேகத்தோடும் 
___________________________________________

கண்களைக் கண்டு காதலைச் 
சொல்லிவிட வேண்டுமென்றுதான் 
தோழி 
ஒவ்வொருநாளும் அருகில் வருகிறேன் 
நீ சுவாசிக்கும் ஓசையை 
ரசித்தபடியே என்னை மறக்கிறேன் 
_________________________________________

சிலநாட்களாய் ஒவ்வொரு நொடியும் 
உன்னைப் பற்றியே நினைக்கிறேன் 
உன்னைப் பார்க்காத தருணங்களில் 
என் உயிர் அழுகின்ற சத்தத்தை 
என்னால் உணர முடிகிறது 
சில்லுகளாய் உடைந்து கிடக்கிற 
என் மனதை 
நீ சேர்த்துவிடுவாய் என்ற நம்பிக்கையிருகிறது 

   

1 comment:

Sowmya said...

U r not only a wonderul sis, but also a wonderful poet.. Ur works r really awesome...!!