Saturday, July 21, 2012

FM

என் சிறுவயதில் என் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி இருந்தது.காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை அது பாட்டுக்கு ஒரு ஓரமாய் இன்னொரு உயிராய் எங்கள் வீட்டில் பேசியபடியோ அல்லது பாடியபடியோ இருக்கும்.
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வானொலிமுன் தொலைக்காட்சி பார்ப்பதுபோல் உட்கார்ந்து கொள்வேன்.எழவே மாட்டேன்.எங்கும் செல்லவும்  மாட்டேன்.அப்படியே காலை எட்டரை மணி நாடகத்திலிருந்து வீட்டிற்குள் வருகின்ற மூன்று அலைவரிசைகளையும் tune  செய்து செய்து வார இறுதி முடிந்து போகும்.சூலூர் கணேசன் வரும் நாடகங்கள்,அப்துல் ஹமீது தொகுத்து வழங்கிய பாட்டுக்குப் பாட்டு ,ஒலிச்சித்திரம் எதனையும் விட்டதில்லை.ஒரு வாரம் மிஸ் பண்ணிவிட்டாலும் வருத்தப்பட்டு,வருத்தப்பட்டு அடுத்த வாரம் வந்துவிடும்.அந்த வானொலிப்பெட்டியில் தான் அம்மா கர்ப்பமாக இருந்தபோது,அதாவது நான் அம்மா வயிற்ருக்குள் இருந்தபோது எப்போதும் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்களாம்.அம்மா இப்போதும் சொல்வதுண்டு.பின்பு தொலைக்காட்சி வந்த பிறகு விட்டுப் போயிருந்த பழக்கம் FM வந்தவுடன் திரும்பவும்  ஆரம்பித்தது.காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து கல்லூரி செல்லும் நொடிவரை ,மாலை வீடு திரும்பியதிலிருந்து தூங்கச் செல்லும்வரை பேச்சு,மூச்சு எல்லாம் FM தான்.FM ...FM ..FM ..மட்டுமே.ஞாயிறுகளிலும்,தேர்வு விடுமுறைகளிலும் என்னை வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாது கட்டிப்போட்டது இந்த FM கேட்கும் பழக்கம்தான்.கேபிள்,கம்ப்யூட்டர் வந்த பிறகு வீட்டில் அறவே விட்டுப்போனது இந்தப் பழக்கம்.என் உயிரில்,உணர்வுகளில் இருந்த இந்தப் பழக்கம் பேருந்துகளில் பயணிக்கும்போது தொடர்கிறது.இரண்டு மணிநேரம் எல்லா அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிக் கேட்டுவிடுவதுண்டு.இப்போது எல்லா வாரங்களிலும் நான் புதிதாக வாங்கிய மொபைலில் என் வீடு முழுக்க FM மணக்கிறது.இது ஏனோ இவ்வளவு நாட்களாய் வைத்திருந்த மொபைல்களில் கிடைக்கவேயில்லை.அலைவரிசைகள் என் வீட்டிற்குள் வருவதால் அம்மாவிற்கு மீண்டும் பழைய ஆசை பூத்திருக்கிறது.ஒரு FM வாங்க வேண்டுமாம் உடனடியாக.வாங்கித்தருகிறேன் என்று சொல்லி இரண்டு மாதமாயிற்று.எப்படியாவது வெகு விரைவில் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வாரத்திலாவது புதிதொன்று வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.எத்தனை சேனல்கள் தொலைக்கட்சியில் வந்தாலும் அம்மாவுக்கு அந்த வானொலி தந்த மகிழ்ச்சி எதுவும் தராதென்று எனக்குத் தெரியும்.

Sunday, July 15, 2012

பேருந்து

வாரந்தோறும் பயணிக்கும் பேருந்துகளில் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள்...
தேர்ந்த ஓட்டுனர்கள் பேருந்தை ஓட்டும்பொழுது ஏற்படுகின்ற பிரமிப்பு அனுபவமில்லாத ஓட்டுனர்கள் ஓட்டும்பொழுது பயமாக வருகிறது.ஓட்டுனர், நடத்துனர்களில் எத்தனை ரகம்.ஓட்டுனர்கள் நமக்குத் தெரியாத மொழிகளில் வடஇந்தியர்களுடன் பேசும்பொழுது ஆச்சர்யம் பிறக்கிறது.
நிறைய "குடிமகன்கள்" பேருந்தில் ஏறி ரகளை செய்து நடத்துனரிடம் அறைவாங்கி,பேருந்திலிருந்து நடுவழிகளில் இறக்கப்பட்டு ...அங்கிருந்து எவ்வளவுதூரம் நடக்க வேண்டிவருமோ அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு...ஒருசிலர் பயணச்சீட்டு வாங்காமல் அசிங்கமாகத் திட்டுகள் பெற்று இறக்கி விடப்படுவர்.
ஒருமுறை ஒரு வயதான பாட்டியும்,முதியவரும் கோவையிலுள்ள கண் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்குச் செல்லும் பொழுது,நடுவழியில் அந்தப் பாட்டி பேருந்திலேயே பாதிமயங்கி ,அந்தப் பாட்டியை தனியாக முயன்று தூக்க முடியாமல் அருகிலிருந்த ஒரு பெண்ணின் உதவியோடு தூக்கி உட்காரவைத்து,சாக்லேட் கொடுத்து(ஒருவேளை Low BPயாக இருக்குமென்று) உடனடியாக உதவிய அந்தப் பெண்மணியிடம் எவ்வளவு கருணை.தன கைக்குழந்தையை தான் முன்பின் அறியாத ஒரு மாணவியிடம் கொடுத்துவிட்டு பாட்டியின் முகத்தில் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை அடித்தார்.ஆனால் இது எல்லாவற்றையும் விட சாப்பிடட்டும் என்று கொடுத்த "bun"னை வேண்டாம் என்று கணவன் அருகிருந்து சொல்லியும் கடைசிவரை மறுத்துவிட்ட அந்த அச்சுஅசல் தமிழ்ப்பாட்டியின் வைராக்கியம் இன்னும் மறக்கப்படாமல் இருக்கிறது என்னுள்.நல்லவேளை பணம் ஏதாவது அவர்களுக்குத் தேவைப்படுமா என்று கேட்டபோது அருகிலிருந்து உதவிய பெண்மணி அவர்களிடம் இருக்கும் என்று சொன்னது நல்லதாய்ப் போய்விட்டது.அவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை,ஒருவேளை பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களாய் இருக்கலாம்.
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அரசியலில் கொடுப்பதெல்லாம் சரி.கொஞ்சம் பேருந்துகளிலும் இருந்தால் பரவாயில்லை. முன் இருக்கைகளையும் வாரந்தோறும் ஆண்கள் ஆக்கிரமித்து விட மூன்று மணி நேரம் நின்று கொண்டே வரும் பெண்கள் நிறைய பேர்.
இன்னுமொரு சம்பவம்.ஒரு ஏழை வீட்டுப்பையன் தன்பாட்டியின் அருகில் அமராமல் இருக்கையின் மீது ஏறி நின்று ஆடிக்கொண்டே இருந்தான்.ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுத்தர வர்க்கப்பெண் தன குழந்தையோடு பேருந்தில் ஏறினார்.அந்தச் சிறுவனுக்கும் இந்த ஏழைச் சிறுவனின் வயதுதான் இருக்கும்.மிக அமைதியாக,,சாதுவாக டிப் டாப் உடையுடன் இருந்தான்.அவனை ஒரு என்ஜிநியாரகவோ,டாக்டராகவோ அவனது பெற்றோர் அவனை ஆக்கிவிடுவர் என்று பார்த்தாலே தெரிந்தது.அத்தனை மிடில்கிளாஸ் பெற்றோர்களும் அதற்குத்தானே ஆசைப்படுகின்றனர். அவனும் அதற்க்கேற்றாட்போல் நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே  வந்தான் அவன் அம்மாவிடம் வாகனங்களைப்பற்றியும்,வரும்வழியில் இருக்கும் எல்லாவற்றைப்பற்றியும்.அத்தனையும் அறிவுப்பூர்வமான கேள்விகள். வெறும் மரங்களையும்,செடிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு குறும்பு செய்து கொண்டிருந்த ஏழைச்சிறுவன் இவனைப் பார்க்கத் தொடங்கினான். சிலசமயங்களில் சிரித்தான்.
ஆனால் அச்சிறுவனுக்கோ இவனைப் பார்ப்பதா,வேண்டாமா, சிரிக்கலாமா,வேண்டாமா அம்மாவிடம் கேட்கலாமா என்று யோசனை.ஒற்றைக்கண்ணாலே எழைச்சிறுவனைப் பார்த்தான் அவன் தன்னைப் பார்க்கும்போதெல்லாம்.என்ன ஆவார்கள் இவர்கள் எதிர்காலத்தில்?
இதற்கிடையில் காதலர்கள் அவர்கள் உண்டு அவர்கள் உலகம் உண்டு என்று இருப்பார்கள்.எதோ தன்னைச் சுற்றி மனிதர்களே இல்லாததுபோல் என்ற ஒரு எண்ணத்தில். இரண்டரைமணி நேரப் பயணத்தில் போரடித்தால் இவர்களை அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம்.
இங்கே பெண்களுக்கெதிரான வக்கிரக் கொடுமைகளும் நடக்காமல் இல்லை.எங்கே எல்லாம் இடிக்கமுடியுமோ,  எங்கே எல்லாம் தொட முடியுமோ ,எங்கே எல்லாம் பார்வையைச் செலுத்த முடியுமோ எல்லாமே நடக்கிறது.தோழிகளுக்கும்,சகோதரிகளுக்கும் ஒன்றே  ஒன்று ;எங்கே நின்றாலும் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் நில்லுங்கள்.சில சமயங்களில் ஒரு ஆறுதல் பெண் போலீஸ் பேருந்தில் உடன் பயணிக்கும்போது மட்டும்தான்.
சில பேருந்துகள் ஆமைகளைப் போல மெதுவாய் நகரும்.சில "ஜெட்"ஆய்ப் எகிறும்.சில பேருந்துகள் கிராமத்திற்குள்ளாகச் செல்ல அவசியமில்லாத போதும் உள்ளே சென்று வரும்.சில செல்ல வேண்டியிருந்தும் நேர்வழியில் செல்லும்.இதை எல்லாம் எந்த அதிகாரி இடமாவது சொல்லலாமா என்று நினைத்து ஆனால் ஏதாவது பிரச்சனை வருமோ என்று அஞ்சி எண்ணியே கோழையாக்கிக் கொள்வதுண்டு. 
நான் நிறைய ஆச்சரியப்பட்டது ஓட்டுனர்களின் இலாவகத்தன்மையைப் பார்த்துதான்.வாகன ஓட்டும் திறமையும், நேரத்தை சரியாகப் புரிந்து திட்டமிடுவதும் எத்தனை போக்குவரத்து நெரிசலிலும் இவர்களால்தான் முடியும்.எனக்கும் கூட உலகில் உள்ள எல்லா வாகனங்களையும் ஓட்டக் கற்றுக்  கொள்ள வேண்டுமென்று அலாதி ஆசை.பார்ப்போம்.இன்னும் நிறைய இருக்கின்றன சொல்வதற்கு.
இப்படி ஒவொரு வாரமும் வித்தியாசமான அனுபவங்கள்.இந்த அனுபவங்கள் இல்லாவிட்டால் ஒவ்வொரு  பயணமும் வாழ்க்கையில் என்னவாகும்.?!